உயிரினங்களின் வினோதங்கள் (மேலும் சில).

யிரினங்களின் வினோதங்கள் அவற்றின் ஆச்சரியங்கள் இவற்றைப்பற்றி நான்கைந்து முறைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். இருந்தும் இந்த உலகின் உயிரினங்கள் அனைத்தும் வினோதமானவைகளே ஒவ்வொன்றும் ஆச்சரியமூட்டுபவைகளே என்பதற்கேற்ப அவற்றைப் பற்றிய தகவல்கள் ஏராளம் இருக்கின்றன. அதில் மேலும் சிலவற்றைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம் வாருங்கள். 



★ எல்லாவற்றையும் அழித்துவிட்டு தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற நினைப்பில் இருந்தாலும் ஏதோ ஒருவகையில் சமநிலையில் இருக்க - வறுக்க மனிதன் வளர்த்துவரும் பறவை இனம்தான் கோழிகள். இந்த கோழிகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு சுமார் 260 முட்டைகளை இடுகின்றன (260 ஆம்லெட் அல்லது 260 ஆஃப் பாயில்). அதிலும் காதோரம் சிவப்பு நிற இறகுகளைக் கொண்ட கோழிகள் வெளிர் (Brown) நிறத்திலும், வெள்ளை இறகுகளைக் கொண்ட கோழிகள் வெள்ளை நிறத்திலும் முட்டைகளை இடுகின்றன (இது நாட்டு ரக கோழிகளுக்கு மட்டும் பொருந்தும். ஊதா பச்சை மஞ்சள் நிறங்களில் முட்டைகள் கிடைத்தால் அது கார்ப்பரேட் கோழியாக இருக்கக்கூடும்). 

★ மனிதர்களைப் போல தங்களுக்கென நண்பர்களை வைத்துக்கொள்ளும் விலங்கு மாடுகள். என்ன சௌக்கியமா?... மேய்சல் எல்லாம் எப்படி இருக்கு?... உங்க ஓனர் ஒழுங்கா பார்த்துகிறாரா?... கேள் பிரண்ட் என்ன சொல்லுரா?... என அவைகள் ஒன்றுக்கொன்று குசலம் விசாரிப்பதுண்டு. இந்த மாடுகள் தங்கள் வாழ்நாளில் 200000 கோப்பைகள் பாலைத் தருகின்றன. அதுமட்டுமல்லாமல் இன்றைய தேவையான மாற்று எரிபொருளான மீத்தேனை ஒரு மாட்டினால் தன் கழிவிலிருந்து ஒரு நாளிற்கு 400 மி.லி அளவிற்கு வழங்க முடியும் (மாட்டை வைத்து மத சாம்பிராணி போடுபவர்களும், அரசியல் சூடம் காட்டுபவர்களும் கவனிக்க).

★ செல்லப் பிராணிகளில் முதன்மையானது நாய்கள். இந்த நாய்களை வளர்ப்பவர்களில் 72 சதவீதத்தினர் பெரும்பாலும் அவைகளுடனே தூங்குகின்றனர் (அடப்பாவிகளா!). மேலும் அவைகளுக்கு பிடித்த பெயரை வைத்து கூப்பிட்டு அழைத்து வர, மேகி என்ற பெண் பெயர் கொண்ட நாய்களும், மேக்ஸ் என்ற ஆண் பெயர் கொண்ட நாய்களும் இந்த உலகில் அதிகமாக இருக்கின்றன (தாய்மொழியில் பெயர் வைங்கப்பா). 

★ நாய்களுக்கு அடுத்து மனிதனின் பிரியமான செல்லப் பிராணி பூனைகள். இந்த பூனைகளுக்கும் பெயர்கள் இருக்க டாம் என்ற பெயர் கொண்ட ஆண் பூனைகளும், குயின் என்ற பெயர் கொண்ட பெண் பூனைகளும் இந்த உலகில் அதிகமாக வாழ்கின்றன. பூனைகள் ஒரு நாளில் சுமார் 16-18 மணிநேரம் தூங்குகின்றன. அந்த தூக்கத்தில் அவைகள் அதிக நேரங்கள் கனவு காண்கின்றன. பூனைகளின் கனவுகள் பெரும்பாலும் காதல் கனவாகவே இருக்கும். ஃபாரின் லொக்கேஷனில் ஜோடியுடன் ஒரு டூயட் பாட வில்லன் நாய்கள் துரத்தும் கனவையும் எப்போதாவது அவைகள் காண்பதுண்டு (கனவுலகவாசி). 

★ பேரலகு பறவை எனப்படும் பெரிய மூக்கை உடைய Toucans என்ற பறவைக்கும் தூங்குவது பிடிக்கும். அதிலும் சுகமாக தூங்குவதென்றால் அவைகளுக்கு அலாதி பிரியம். கிளிகள் மற்றும் மரங்கொத்திகளைப் போன்று மரப்பொந்துகளில் வாழும் இவைகள் தூங்கும் போது தங்கள் தலைக்கு சுகமாக இருக்க வலுவலுப்பான கற்களை தேந்தெடுத்து வைத்துக் கொள்கின்றன. (காலை நீட்டி, விட்டத்தைப் பார்த்து, மல்லாந்து படுத்து, தலைக்கு கல்லை வைத்து, மூக்கை திறந்து......கொர்ர்ர்). 

★ துருவப் பகுதியான ஆர்டிக் கடற்கரை தீவுகளில் உள்ள பாறைகளில் Puffin என்ற கடல் கிளிகள் மூன்று அல்லது நான்கு அடிகளுக்கு பள்ளம் தோண்டி வீடுகட்டி கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. ஒவ்வொரு குடும்பத்திற்கு ஒரு வீடு என இருக்க வீடு மட்டுமல்லாமல் தனியே கழிவறைகளை கட்டிக் கொள்ளும் பழக்கமும் இவைகளுக்கு உண்டு (போகிற போக்கில் போனால் என்ன? என்றில்லாமால் ஒரு வீடு ஒரு கழிவறையை செயல்படுத்தி 'இருக்கும்' மேதாவிகள்). 


★ கடல் கிளிகளைப் போலவே பன்றிகளும் சுத்தபத்தமானவைகளே. என்னதான் சேற்றில் உருண்டு புரண்டாலும் அவைகளும் தனியாக கழிப்பறைகளை உபயோகிக்கின்றன. குட்டிகள் கூட அம்மா சூச்சு கக்கா வருது என அடம் பிடிக்காமல் தனியே கழிப்பறைக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருக்கின்றன. பார்க்கும் திறனை குறைவாக கொண்ட இந்த பன்றிகள் மூளைத்திறனில் அசாத்தியமானவைகள். மேலும் அந்த விசயத்திலும் அவைகள் கெட்டிக்காரர்கள். பதினோறு மணி கிளுகிளுப்பு லேகியம்  இல்லாமலே அரைமணி நேரம் அவைகளால் தொடர்ந்து... இடைவிடாமல்... களைத்துபோகாமல்... சலித்து போகாமல்... ம்ம்ம்  (சென்சார் கட்). 

★ 250- 325 மில்லியன் வருடங்களாக இந்த உலகில் இருக்கும் உயிரினமான Damselfly என்ற ஊசித் தட்டான்களும் அந்த விசயத்தில் கில்லாடிகள்தான். உடலுறவு முடிந்த பின்பும் அவைகள் பல மணிநேரங்கள் இணைந்தே இருக்கும். அந்நேரத்தில் அவைகளின் இணைந்த வால்கள் பார்ப்பதற்கு காதலின் சின்னமான இதய வடிவில் (Heart Shape) இருக்கும். Inter Septic Mating என்ற போட்டி இனப்பெருக்கத்தை தடுக்கவே இவைகள் இவ்வாறு இணைந்து பல மணிநேரங்கள் இருக்கின்றன (இருக்காதா பின்னே! காதலால் பினைந்த காமமாச்சே). 

★ வௌவால்கள் தலைகீழாகத் தொங்கும் தலைகீழாகத் தூங்கும் என கேள்விப் பட்டிருக்கிறோம். வௌவால்கள் தலைகீழாகவே உடலுறவு கொண்டு தலைகீழாகவே பிரசவிக்கின்றன. குட்டிகளை இடும் பறக்கும் விலங்கினமான இவைகள் தலைகீழாக பிரசவிக்கும் நேரத்தில் வெளிவரும் குட்டிகளை தன் கைகளால் (கால்கள்) தாங்கிப் பிடித்துக்கொள்கின்றன. வெளிவந்த குட்டிகளும் சிறிது நேரத்தில் தன் இனத்தைப் போல தொங்க பழக்கப்பட்டுவிடுகின்றன (இயற்கையின் தலைகீழ் விகிதங்கள்).

★ வண்ணத்துபூச்சிகளுக்கு 6000 கண்கள் (6000 mega pixel). இருந்தும் அவைகளால் சிவப்பு பச்சை மஞ்சள் என்ற மூன்று நிறங்களை மட்டுமே பார்க்க முடியும். மேலும் வண்ணத்துப்பூச்சிகள் பரம காது மன்னிக்கவும் பரம சாது. அவைகளுக்கு கேட்கும் திறனே கிடையாது. மூக்கு வாய் இருந்தும் அவைகள் தங்கள் கால்களின் மூலமாகவே மனத்தையும் சுவையையும் அறிந்து கொள்கின்றன (ENT குறைதான் என்றாலும் END இல்லாத அழகு).

★ பல்லிகளைப் போல தவளைகளும் தண்ணீரை பருகாது. வாழ்நாளில் பாதிநேரம் தண்ணீரிலே இருக்கும் அவைகள் தங்களின் தோலின் மூலம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை எடுத்துக் கொள்கின்றன. மேலும் தவளையால் வாமிட் எடுக்கவும் முடியாது. உண்டது செரிக்காவிட்டால் மீண்டும் அது வயிற்றுக்கு செல்லும் ஜீரண அமைப்பை அவைகள் பெற்றிருக்கின்றன (தண்ணியடிக்கும் பழக்கமும் கிடையாது. ஓவரான வாமிட் எடுத்து மட்டையாகும் பழக்கமும் கிடையாது).

★ இந்த உலகில் காடுகள் உருவாக பெரும் பங்கு வகிப்பவைகளில் மிக முக்கியமானது அணில்கள். பழங்களின் விதைகளே அவைகளின் உணவாக இருக்க அவற்றை கொறிக்கும் அவைகளின் முன் பற்கள் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டேயிருக்கும். அத்தகைய அணில்களுக்கு மற்ற உயிரினங்களை விட கைவிடப்பட்ட மாற்றான் குட்டிகளை தத்தெடுத்து தன் குழந்தையென பேணிக்காக்கும் அபூர்வ குணமும் இருக்கிறது (கருனை உள்ளம் கடவுள் இல்லம்).