வர்ணஜாலம்.




உலக சினிமாவில் முதலிடம் வகிப்பது ஈரானிய திரைப்படங்கள். இரண்டாமிடம் கொரியன் திரைப்படங்கள். ஈரானிய திரைப்படங்களை முதலிடத்திற்கு அழைத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் மஜீத் மஜீதீ. நீங்கள் உன்னத சினிமாவை சுவைக்க வேண்டுமா தவறாமல் இவரை சேர்த்துக்கொள்ளுங்கள். உலகில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்து
கொண்டேயிருக்கின்றன. அவற்றுள் மனித சிந்தனையை மேம்படுத்தும் மகத்தான படைப்புகள் மிக அறிதே. அவ்வரிசையில் என்றென்றும் முக்கிய இடத்தில் உள்ளது 'கலர் ஆஃப் பாரடைஸ்' (Color of Paradise) எனும் இவரது திரைப்படம்.

கண் பார்வையற்ற இளம் சிறுவன் ஒருவனின் அழகிய கலர்புல் உலகம்தான் colour of paradise.

மொஹமத் எனும் சிறுவன் டெஹ்ரானில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான், தாயை இழந்த அவனுக்கு உறவு அவனது தந்தை. ஆனால் அவனது தந்தையான ஹாஷெமுக்கு தன் மகன் பார்வையற்றவனாக இருப்பதில் சங்கடமும் அவமானமும் உண்டு. மனைவியை  தனக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள விரும்பும் இந்த நேரத்தில் மொஹமது தன் வீட்டிலிருக்க வேண்டாம் என நினைக்கிறார். அதனால் அவனை ஏதாவது செய்யவேண்டும் என பலவாறு முயற்சிக்கிறார். பள்ளி முடிந்ததும் விடுமுறைக்குப் பிறகும் அவனை பள்ளியின் தங்கும் விடுதியில் வைத்துக்கொள்ளமுடியுமா? எனக் கேட்கிறார். பள்ளியின் தலைமை ஆசிரியர் முடியாது எனக் கூறிவிடுகிறார்.
வேறுவழியின்றி அவனை ஊருக்கு அழைத்து வருகிறார்.

கிராமத்துக்கு வரும் மொஹமத் இயற்கையெழிலின் சுகந்தத்தை. தென்றலை, குளிர்ச்சியை அனுபவிக்கிறான். அவனது சகோதரிகள் அவனை அன்போடு, பாசத்தோடு வைத்துக் கொள்கிறார்கள்.
அவனது சகோதரிகள் படிக்கும் பள்ளிக்கு மொஹமத் அழைத்துச் செல்லப் படுகிறான். அங்குள்ள ஆசிரியர், மாணவர்கள் இவனது அறிவுக் கூர்மையைக் கண்டு வியக்கிறார்கள்.வீடு திரும்பும்போது பாட்டி நான் 20 மார்க் வாங்கிட்டேன் என்று அவன் கூவிக் கொண்டே வருவதை அப்போதுதான் அங்குவந்த அவனது தந்தை ஹாஷெம் அதைக் கேட்டு வெறுக்கிறார். அவன் இங்கிருந்தால் திரும்பவும் படிப்பு அது இது என்று தொடர்ந்து இங்கேயே தங்கிவிடுவான், அது புதிய உறவினர்கள் வீட்டுக்கு வரும்போது மிகவும் அவமானகரமாகிவிடும். அவனை கைத்தொழில் ஒன்றைப் பழகச் சொல்லிவிட்டால் மொஹமதுவின் வாழ்க்கையே திசைமாறிவிடும் என நினைக்கிறார்.

இதனால் அடுத்தநாளே அவனை வலுக்கட்டாயமாக வேறொரு மலைக் கிராமத்தில் உள்ள ஒரு மரத் தச்சரிடம் கொண்டுபோய் விடுகிறார். தச்சரும் பார்வையற்றவரே. மொஹமதின் தந்தையான ஹாஷெம் நிறைய பணத்தோடு பெண்வீட்டாரிடம் செல்ல, மணப்பெண் அவரை அன்பொழுக எதிர்கொள்கிறாள். அங்கு அவர்களின் சம்பிரதாயப்படி பேசி பணத்தைக் கொடுத்து பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் நாளையும் குறித்துவிட்டு வருகிறார்.
சிறுவனை அவனது அன்பான சகோதரிகளிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றதை பாட்டி கடுமையாக எதிர்க்கிறார். அதுமட்டுமன்றி ஹாஷெமின் நடவடிக்கைகளை எதிர்த்து வீட்டைவிட்டு வெளியேறவும் செய்கிறார்
இந்நிலையில் ஹாஷெம் தன் தாய் உடல்நிலை சரியில்லாத நிலையில் வீட்டைவிட்டுச் செல்வதை நினைத்து சற்றே வருந்துகிறார். தனது மூட்டை முடிச்சோடு அம்மா செல்லும்போது வேகமாக பின்தொடர்ந்து வருகிறார் ஹாஷெம்.மொஹமதை மீண்டும் கூட்டி வந்துவிடுவதாக வாக்குறுதி அளிக்கிறார். இதைக் கூறிய பிறகே சமாதானம் அடைகிறார் அவரது அம்மா..பிறகு மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்துவிடுகிறார்.

ஹாஷெம் தனது புதிய மனைவி வரப்போகும் வீட்டுக்கு சில மராமத்து வேலைகளை உற்சாகமாகச் செய்கிறார். வீட்டுக்கு வண்ணங்களைத் தீட்டி புதுப்பொலிவு பெறச் செய்கிறார். ஹாஷெமின் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கும் முகமாக பாட்டி தன் புதிய மருமகளுக்குத் திருமணப் பரிசாக தனது விலையுயர்ந்த மணிமாலையைத் தருகிறார். உண்மையில் இதன்பொருட்டே அம்மாவை சமாதானப்படுத்திய ஹாஷெம், நகை கைக்கு வந்ததும் பூரிப்படைகிறார். ஹாஷெம் குணம் பாட்டிக்குத் தெரியும். பேரனை அழைத்துவருவது உறுதியானதல்ல என்பதை உணர்கிறார். பிரிந்துசென்ற தனது பேரன் மொஹமதை நினைத்து ஒரு கணம் ஏங்குகிறார். அன்று இரவே பாட்டியின் உயிர் பிரிந்துவிடுகிறது. மறுநாள் காலை தனது தாயை அடக்கம் செய்துவிட்டு ஹாஷெம் வேலைக்குப் புறப்படுகிறார்.திருமணத்துக்கு முன்பே மணமகனின் தாய் இறந்தது சகுனம் சரியில்லை என்று சொல்லி விடுகிறார்கள் பெண்வீட்டார். இதனால் இத்திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்ததோடு அவர் கொடுத்த சீதனத்தை (பணமூட்டை) யும் ஹாஷெவிடம் கொடுத்துவிடுகிறார்கள்.
தாய் இறந்ததற்குக் கூட அழாத ஹாஷெம் பெண் வீட்டாரின் இந்த முடிவால் இடிந்துபோகிறார். கத்தி அழுகிறார். பணமூட்டையை அப்படியே போட்டுவிட்டு இனி தனது ஒரே வாழ்வாதாரமான தன் மகனை கண்டுஅழைத்து வரச்செல்கிறார். 

குதிரையில் புறப்படும்போதே மேகமூட்டமும் இடியுமாக ஒரு மாதிரியான தீய அறிகுறியை இயக்குநர் காட்டிவிடுகிறார். வழியெங்கும் மழைபெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நமக்கும் என்ன நடக்கும் என்ற பயம் தொற்றிக்கொள்கிறது. அவர் தனது மகன் வேலை கற்றுக்கொள்ளும் பார்வையற்ற தச்சரின் தச்சுப் பட்டறைக்குச் சென்றாரா? மகனை அழைத்துவந்தாரா? அப்படி அழைத்து வரும்போது பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தை மரப்பாலத்தில் கடந்துவரும்போது என்ன ஆனது என்பதையெல்லாம் மீதிபடம் கடும்வலியோடு சித்தரித்துள்ளது.

பாலபிசேகம், பண்ணீர் அபிசேகம் என நடிகனை கடவுளாக்கிப் பார்க்கும் விசிலடிச்சான் குஞ்சிகளும், Facebook - twiter என்று  ஒன்னுக்கும் உதவாத குப்பைக்கு குடைபிடிக்கும் நெட்டீசன் குஞ்சுகளும், ஒரு நடிகன் எப்படி இருப்பான் என தெரிந்து கொள்ள. படத்தில் கண்தெரியாத சிறுவனாக நடித்திருக்கும் மோஹ்சன் ராமிசேனியை பாருங்கள். பள்ளியைவிட்டுப் பிரியும் போதும் சகோதரிகளை, பாட்டியைவிட்டுப் பிரியும்போதும், தன் மனக்கிளை முறிந்த சோகத்தை வெளிப்படுத்தும்போதும், இயற்கையின் உலகத்தில் திளைக்கும் உற்சாகத்தை வெளிப்படுத்தும்போதும் ராமிசேனியின் நடிப்பும் பால்யமுகம் நம் இதயத்தை கரைந்து போகச்செய்கிறது.


படத்தில் ஒரு காட்சி வரும், பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே வந்து தன் தந்தை வருகைக்காக ஒரு தோட்டத்தில் அவன் காத்திருப்பான். அப்போது பறவைகளின் கூவல்கள் யாவும் அவன் முகத்தை மலர்ச்சியடைய செய்யும். அப்போது ஒரு சிட்டுக்குருவியின் குஞ்சு கூட்டிலிருந்து கீழே விழுந்துவிடுகிறது. இதை நுட்பமான ஓசையுணர்வில் அறிந்து மெல்ல மெல்ல தட்டுத்தடுமாறி செல்வான்.அப்போது ஒரு பூனை கத்தியபடியே ஓடிவரும். கீழே விழுந்திருக்கும் குருவிக்குஞ்சை பூனை நெருங்குவதற்குள் இவன் நெருங்கி அதை விரட்டிவிட்டு குருவிக்குஞ்சை தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டு மரத்தில் ஏறுவான். மரக்கணுக்களில் கால்வைத்து பின்னர் கிளைகளில் கால்வைத்து கைகளால் தடவிப் பார்த்து சிட்டுக்குருவியின் கூடு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பான். தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து குருவிக்குஞ்சை எடுத்து குருவிக்கூட்டில் எடுத்து வைக்கும்போது அவனது விரல்களை குருவி கவ்வுவதும் ரசித்து மகிழக்கூடியக் காட்சி....

கடைசி காட்சியில் கரை ஒதுங்கியுள்ள இறந்த மகனின் உடலை மடியில் போட்டு தந்தை கதறுவது மனதை கதிகலங்கச் செய்கிறது இதில் தந்தையின் முதுகுப்புறம் நீட்டியுள்ள மகனின் கைவிரல்கள் மெல்ல அசைகிறது. இறந்த பிறகு காட்டும் இந்தப் பாசத்தால் எந்தப் பயனுமில்லை என்பதாக மூடியிருந்த அந்த விரல்கள் விரிகின்றன. பொன்னிற ஒளிஅதிர்வில் அந்த விரல்களின் அசைவதன் வாயிலாக எந்தப் பயனுமில்லை எனக் காட்டும் இயக்குநர் மஜீத் மஜிதி இங்கு பார்வையாளரின் மனதோடு பேசுகிறார். இதனால்தான் உலகசினிமா அவரை கொண்டாடுகிறது. 

ஒரு சிறந்த படைப்பை பார்த்து ரசித்ததையும் (மன்னிக்கவும் கலங்கியதையும்), மாபெரும் கலைஞனை தரிசித்ததையும் தங்களோடு பகிர்கிறேன்.

Color of Paradise
Language - Persian.
Director - Majid Majidi.
Music - Alireza Kohandairy.
Cinematography- Mohamad Davudi.
Editor - Hassan Hassandoost.
Year - Feb 1996.