Pumzi - ஒருநாள் நடக்கும்.

ட்டம் காட்டும் வட கொரியா, அதிரடிக்கு காத்திருக்கும் அமேரிக்கா, அமைதியாக பதுங்கியிருக்கும் ரஷ்யா, அலப்பரை கொடுக்கும் சீனா, அழிய ஆசைப்படும் அரபு தேசங்கள், அவ்வபோது பயமுறுத்தும் ஐ.எஸ்.ஐ என இவற்றையெல்லாம் பார்க்கும் போது மூன்றாம் உலகப்போர் எப்போது தொடங்கும் என்ற அச்சம் நமக்கு வரக்கூடும். ஆனால் தொழில்நுட்பமும் அறிவியலும் அபரிவிதமாக வளர்ச்சியடையத் தொடங்கிய இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே  மூன்றாம் உலகப்போருக்கான விதை விதைக்கப் பட்டுவிட்டது என சூழ்நிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது அறிவியல் என்ற ஆயுதம் கொண்டு நாம் அனைவரும் போர் வீரர்களாக களத்தில் நின்று இந்த உலகை அதன் இயற்கையை அதனோடு தொடர்புடைய உயிர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் தொடங்கிவிட்டோம் என்பது அவர்களின் கருத்து.


அதனை உண்மையாக்கும் விதத்தில் இன்றைய நிலவரப்படி உலகின் பல இடங்களின் காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன, ஆறுகளும் மலைகளும் விளைநிலங்களும் இருந்த தடம் தெரியாமல் மாற்றப்பட்டுவிட்டன. பற்றாக்குறைக்கு நிலம் நீர் காற்று என அனைத்தையும் மாசுபடுத்தி  ஜீவராசிகளின் வாழ்வியலும் சிதைக்கப் பட்டுவிட்டன. சுருக்கமாகச் சொன்னால் அறிவியல் புனைவு கதைகளில் வரும் கற்பனைக்கு எட்டாத உலகத்தை நோக்கி நாம் வெகு விரைவாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி வசிக்கத் தகுந்த நிலத்தையயோ, குடிக்க தகுந்த நீரையோ, சுவாசிக்க நல்ல காற்றையோ, ஒரு மரத்தையோ அதன் நிழலையோ, மனிதனைத் தவிர்த்த ஏனைய ஜீவராசிகளையோ நாம் தேடி அலையும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்த குறும்படத்தின் நாயகியும் அதைத்தான் தேடிச் செல்கிறாள்.

அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட Apocalyptic என்ற அறிவியல் புனைவு உலகில் வாழ்ந்துவரும் இந்த கதையின் நாயகி ஆஷாவிற்கு பழங்கால மர விதை ஒன்று கிடைக்கிறது. சொற்ப மனிதர்கள் மட்டும் மிஞ்சியிருக்கும் நிலையில் பாதுகாப்பான ஓரிடத்தில் வசிக்கும் அவள், அந்த விதையை தகுந்த இடத்தில் விதைத்து இறந்துபோன இந்த பூமிக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சி செய்கிறாள். தனது பாதுகாப்பான தடைகளை மீறி அவள் தன் உயிரையும் பொருட்படுத்தாது அதை எவ்வாறு செய்து முடிக்கிறாள் என்பதே இந்த குறும்படத்தின் கதை.

நமக்கு தெரிந்தோ தெரியாமலோ மூன்றாம் உலகயுத்தத்தை நாம் அமைதியாகத் தொடங்கி அதி விரைவாக நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த யுத்தத்தின் முடிவை, அதன்பிறகு தொடரும் விளைவுகளை, கற்பனையாக அல்லாமல் ஒருவேளை நிகழக்கூடும் என்ற அச்சத்துடன் அழகாக சித்தரிக்கிறது இந்த கென்யா நாட்டு குறும்படம்.


📎

  • Written & Directed by - Wanuri Kahiu.
  • Music - Siddhartha Barnhoorn.
  • Cinematography - Grent Appleton.
  • Year - 2009.
  • Country - Kenya.
  • Language - English.