தேவதையின் கதை.




தேவதைகளின் கதை சுவாரசியமானது, புத்தகம், காமிக்ஸ், கார்டூன், சினிமா என உலகமெங்கும் பல தேவதை கதைகள் கொட்டிக் கிடக்கிறது. அற்புதங்களும், மாயாஜாலங்களும் கலந்த அந்த கதைக்குள் சிறுபிள்ளை என தொலைந்து போவது தனிசுகம். அந்த வகையில் ஜெர்மனியின் புகழ்பெற்ற "Grimm" என்ற எழுத்தாளர் சகோதரர்களின் " Rupunzel" என்ற கதை மிகப்பிரபலம். சின்ரெல்லாவிற்கு அடுத்தபடியாக குழந்தைகளின் உலகில் நிரந்தரமாக தங்கியிருக்கும் இந்த கதையைத் தழுவி எண்ணற்ற திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் 2010 ஆம் ஆண்டு Walt Disney தயாரித்த "Tangled" என்ற அனிமேஷன் திரைப்படம் தேவதை கதையை இன்னும் சுவாரசியமாக்கியது. வாருங்கள் அந்த சுவாரசியமான மாயாஜால கதைக்குள் நுழைவோம். 

Corona Kingdom ராஜ்ஜியத்தின் மகாராணிக்கு சுகவீனம் ஏற்படுகிறது. சூரியனிடம் இருந்து மகா சக்தியைப் பெற்ற தங்கமலரை கொண்டுவந்தால் மகாராணி குணமடைந்துவிடுவாள் என்கின்றனர். தீராத நோய்களையும் என்றும் இளமையையும், இறந்தவர்களை பிழைக்கவைக்கும் மகத்துவமும் கொண்ட அந்த அபூர்வ மலரைத் தேடி நாடுமுழுவதும் வீரர்கள் அலைகின்றனர். அதே தங்கமலரை "Mother Gothel" என்பவள் தொலைந்துபோன தன் இளமையை மீட்பதற்காக நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறாள். இறுதியில் வீரர்கள் கையில் கிடைக்கும் தங்கமலரால் மகாராணி குணமடைகிறாள், பிறகு கருவுற்று "Rupunzel" என்ற இளவரசியை பெற்றெடுக்கிறாள். தங்கமலரின் மகத்துவத்தால் பிறந்த இளவரசியின் தலைமுடிக்கு (கூத்தலுக்கு) அந்த தங்கமலரின் மகத்துவம் கிடைக்கிறது. நீண்ட நாட்களாக தங்கமலரை தேடிக் கொண்டிருந்த Mother Gothel- க்கு இது தெரியவர குழந்தையாக இருக்கும் இளவரசியை கடத்திச் செல்கிறாள். யாருக்கும் தெரியாத அடர்ந்த காட்டிலுள்ள தன்னந்தனியான ஒற்றைக் கோபுரத்தின் உச்சியில் அவளை வளர்த்து வருகிறாள். மகளை காணது வாடும் ராஜாவும் மாகாராணியும் இளவரசியின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் விளக்கினாலான காற்றாடி பட்டங்களை வானில் பறக்கவிட்டு தன் மகள் நலம்வாழ பிரார்த்தனை செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அதை கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்க்கும் Rupunzel மனதிற்குள் இனம்புரியாத மாற்றம் ஏற்படுகிறது. வெளிஉலகமே தெரியாது Mother Gothel தன்னுடைய அம்மா என்று நினைத்து அவள் கூறும் வெளிஉலகத்தைப் பற்றிய அச்சுருத்தும் கட்டுக்கதைகளை நம்பி பதினெட்டு வருடங்கள் Rupunzel தனிமையிலே வாழ்ந்து வருகிறாள். "Pascal" என்ற பச்சோந்தி மட்டுமே அவளுக்கு எல்லாமுமாக இருக்கிறது. 



தங்கமலரின் மகத்துவத்தை பெற்ற Rupunzel -ன் கூந்தல் 60 அடிக்குமேல் வளர்கிறது. Mother Gothel ஒவ்வொருநாளும் சாப்பிட உணவுகளை கொண்டுவந்து கொடுத்துவிட்டு வெளிஉலகத்தைப் பற்றிய பயப்படும் கட்டுக்கதைகளை வழக்கம்போல் கூறிவிட்டு, அந்த கூந்தலின் ஸ்பரிசத்தால் இளமையை பெற்றுவருகிறாள். இதற்கிடையில் Flyn Rider என்ற திருடன் அரண்மனையில் உள்ள மாகாராணியின் கிரீடத்தை திருடிச்செல்கிறான். அவனை வீரர்கள் துரத்த காட்டிற்குள் ஓடி தற்செயலாக Rupunsel இருக்கும் ஒற்றை கோபுரத்தின் உச்சியை அடைகிறான். ஆண்களையே கண்டிராத Rupunzel அவனைக் கண்டு பயந்து அடித்து கட்டிப் போடுகிறாள். மயக்கம் தெளிந்து விழிக்கும் Rider Rupunzel ஐ கண்டு ஆச்சரியம் அடைகிறான் ஒருவழியாக பேசி அவளை வழிக்கு கொண்டுவந்து வெளிஉலகைப் பற்றிய உண்மைகளை எடுத்துரைக்கிறான். அவனை நம்பி Rupunzel வெளி உலகத்தை காணும் தன் எண்ணத்தை கூறுகிறாள், அவனும் அவளை வெளியே கூட்டிச் செல்வதாக ஒப்புக் கொள்கிறான். இருவரும் அந்த கோபுரத்தைவிட்டு கீழே இறங்குகின்றனர் Rupunzel முதன்முதலாக தன் காலடியை தரையில் பதிக்கிறாள் புதிதாக பிறந்த குழந்தையாக உணருகிறாள். இருவரும் காடு, மலை, அருவி என சுற்றித் திரிகின்றனர். திருடர்களின் கூட்டம் ஒன்றிர்க்கு சென்று ஆடிப் பாடி மகிழ்கின்றனர். திருடனான Rider - ஐ தேடி அரண்மனை வீரர்கள் ஒருபக்கம் அலைகின்றனர். மேலும் கோபுரத்தில் இருந்த Rupunzel காணாது Mother Gothel மறுபுறம் தேடி வருகிறாள். 

Rupunzel மற்றும் Rider இருவரும் காட்டிலிருந்து நகருக்குள் செல்கின்றனர். அரண்மனை வழக்கம்போல் தொலைந்துபோன இளவரசியின் பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாட விழாக்கோலம் பூண்டிருக்கிறது. தான்தான் அந்த இளவரசி எனத்தெரியாது Rupunzel தெருவில் உள்ள குழுவினரோடு ஆடிப்பாடி மகிழ்கிறாள் இவர்களைக் கண்ட காவல் வீரர்கள் துரத்த அங்கு நடக்கும் கலவரத்திற்குப் பிறகு இருவரும் தப்பித்து பக்கத்திலிருக்கும் நதியை அடைகின்றனர். அற்றிரவு வானில் பறக்கும் விளக்கு காற்றாடி பட்டத்தை ரசிக்கின்றனர். தனக்கான வெளி உலகையும் இனிமையான இந்த நாட்களையும் தந்த Rider ஐ Rupunzel கட்டிக்கொள்கிறாள். அவனும் இறுதிவரை உனக்கு இந்த சந்தோசங்களைத் தருவேன் என வாக்கு கொடுக்கிறான். இருவரும் தங்களின் காதலை முதன்முறையாக பகிர்ந்து கொள்கின்றனர். ஆற்றின் மறு கரையையடையும் நேரத்தில் அங்குவரும் Mothet Gothel Rider - ஐ காயப்படுத்திவிட்டு மீண்டும் கடத்திச் செல்கிறாள். 



காயம்பட்ட Rider பிழைத்தானா? தன் காதலியை மீட்டு, வாக்கு கொடுத்ததுபோல் நிஜவாழ்க்கையை கொடுத்தானா? அரண்மனை வீரர்களிடம் மாட்டிக் கொண்டானா? .
Rupunzel தான் ஒரு இளவரசி என உணர்ந்தாளா? சிறிது நாட்கள் அனுபவித்த நிஜ வாழ்க்கையை திரும்பப் பெற்றாளா?  தன் நினைவாக பதினெட்டு வருடங்களாக காத்திருக்கும் பெற்றோர்களிடம் சென்று சேர்ந்தாளா?.
Mothet Gothel என்ன ஆனாள்? அவளது என்றும் இளமை என்னவாயிற்று? 
அத்தனை கேள்விகளுக்கும் விடைகாண திரைப்படத்தை பாருங்கள். 

மிக நேர்த்தியான 3D அனிமேஷன் காட்சிகளால் இந்த தேவதைகதையில் மனம் ஒன்றிப்போகச் செய்யும் அளவிற்கு திரைப்படத்தை இயக்கியவர் "Nathen Greno" மற்றும் "Byron Howard". மேலும் படத்திற்கு மற்றொரு பலம் "Alan Menken"சிறப்பான இசை. படத்தில் வரும் when will my life begin? , I've get a dreem, Isee the light போன்ற பாடல்கள் மெய்மறக்கச் செய்பவை. Pascal என்ற பச்சோந்தியும் Maximus என்ற குதிரையும் அடிக்கும் லூட்டி அனைவரையும் சிரிக்க வைக்கும். முன்பே சொன்னதுபோல் சுவாரசியமான மாயாஜால உலகத்திற்குள் குழந்தை என தொலைந்துபோக தவறாமல் இந்த திரைப்படத்தை பாருங்கள். 


Trailer.



Song - I see the light.. 


Song - When will my life Begin.