அந்த குண்டு பையன்.


ந்த குண்டு பையனுக்கு பிறந்ததிலிருந்து இசை மீது ஆர்வம் இருந்தது. பாகிஸ்தானி இந்தியரான அவனுடைய தந்தைக்கு வசதிவாய்ப்புகள் ஒன்றும் குறைவில்லை. லண்டனில் வசதியாக வாழ்ந்து வர பையனின் ஆசைக்கு அவர் தடை எதுவும் சொல்லவில்லை. பையன் அவன் பாட்டுக்கு வளர்ந்தான். முதன்முதலாக பத்துவயதில் R.D பர்மனின் இசைநிகழ்ச்சியில் அந்த குண்டு பையன் தன் இசை திறமையை காட்ட அதில் கலந்து கொண்ட பாடகி ஆஷா போன்ஸ்லேவிற்கு இவன் ஒருநாள் பெரிய ஆளாக வருவான் என பொறிதட்டியது. அவர் கையால் ஆசிர்வாதமும் கிட்டியது. தேவதையின் கை. அதற்குப் பிறகு அந்த குண்டு பையன் பியானோ, கீ போர்டு, கிட்டார், அக்கார்டின், சாக்ஸபோன், வயலின், டிரம்ஸ், தபேலா, ஹார்மோணியம், சித்தார், சந்தூர் போன்ற 35 க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை வாசிக்க பழகினான். பாடல்களைப் பாட சங்கீதமும் முறையாக கற்றுக் கொண்டான். ஜலதோசம் பிடித்த மூன்றாம் நாள் குரல்போல அவனது குரல் தனித்திருந்தது. அது அழகாய் இருந்தது. அதுவே அவனது அடையாளமாக மாறியது.

தனது இளமைக்காலங்களில் அந்த குண்டு பையன் சின்ன சின்ன மேடைகள், டிவி நிகழ்ச்சிகள், விளம்பரம், விளிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு இசையமைத்து பலரது பாராட்டுகளைப் பெற்றான். சில ஜிங்கில்ஸ் பாடி ஆங்கில ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டான். பிறகு புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேனுடன் இணைந்து The One & Only (1989) என்ற ஆல்பத்தை வெளியிட்டான். தனியாக வெளியிட்ட Raag Time ஆல்பம் இவனை கவனிக்க வைத்தது. Sargam என்ற பாகிஸ்தான் திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்க அதில் தன்னை சிறுவயதில் ஊக்குவித்த ஆஷாபோன்ஸ்லேவை பாட வைத்தான். இந்தியில் வெளியான Lift kara de என்ற பாடல்தான் அவனை மிகவும் பிரபலப்படுத்தியது. அப்போதுதான் அந்த 160 கிலோ குண்டு பையனை அட்னன் சாமி (Adhan Sami Khan) என அனைவருக்கும் தெரிந்தது.

இன்று நாற்பதை தாண்டிய அட்னன் சாமி இந்திய இசையின் குறிப்பிடத்தக்க நபராக இருக்கிறார். அவரது ஆல்பங்களும், இசைக் கோர்வைகளும் மெய் மறக்க செய்பவை. குறிப்பாக பியானோவுடன் சந்தூர் என சொல்லக்கூடிய பழங்கால இசைக்கருவியை சேர்த்து இசையமைப்பதில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம். அந்த பாடல்களைக் கேட்டால் காற்றில் பறப்பதுபோலத் தோன்றும். பழங்கால இசைக் கருவிகளையும் சூஃபி, ஜென் இசைகளையும் முறையாக பயன்டுத்துவார். அனைத்து இந்திய மொழி திரைப்பட பாடல்களில் இவரது குரலை கேட்டிருக்கலாம் கேட்கலாம். தமிழில் பாய்ஸ், ஆய்த எழுத்து, SMS, சத்தம் போடாதே, சமீபத்திய வீரம் திரைப்படத்திலும் இவர் பாடல்களை பாடியிருக்கிறார்.

தன் உடல் எடையால் அவதியுற்ற இவர் தற்போது நீண்ட சிகிச்சைக்குப்பின் திரும்பியிருக்கிறார். இசைக் கச்சேரி, டிவி ஷோ, மற்றும் சில படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். வழக்கமான இந்திய மதம் இவர் வாழ்க்கையிலும் விளையாடுகிறது. பாகிஸ்தான் - இந்தியா - லண்டன் என குடியுரிமை இவரை அலக்கழிக்கிறது. இருந்தும் மும்பையில் தற்போது வசித்து வருகிறார்.

சிறுவயதில் கேட்ட Lift kara de பாடல்தான் அடியேனை இவரிடம் ஈர்த்தது. பிறகு பாடல்களுக்கான தேடல் அவரிடம் நெருக்கமாக கொண்டு சென்றது. அட்னன் சாமியின் கஸல் பாடல்கள் மனதை இலகுவாக்கக் கூடியது. அவரது ஆல்பங்களின் தொகுப்புகள், திரைப்பட பாடல்கள், என அனைத்தையும் அடியேன் சேமித்து வைத்திருக்கிறேன். அவற்றுள் ரசிக்கும் சிலவற்றை இந்த குண்டு பையனைப் பற்றிய தகவலுடன் பதிவு செய்கிறேன்.

பாடல்களைக் காண