இன்று ஒரு தகவல் (புத்தகம்) .

பால்ய காலங்களில் அதிகாலையில் துயில் எழுப்பும் அரிய குரல் இருவரது. ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது எனத்தொடங்கும் "சாரோஜ் நாராயணசாமி", ஒரு ஊருல ஒருத்தன் இருந்தான் எனத்தொடங்கும் "தென்கச்சி கோ. சுவாமிநாதன்". என்பதுகளில் பிறந்தவர்களுக்கு மிகவும் பரிசித்தமான இரண்டு குரல்கள். வானொலி (ரேடியோ) என்ற பொக்கிஷம் இருந்த காலத்தில் காலை செய்திகளுக்குப் பிறகு தென்கச்சி பேசத் தொடங்குவார். தினம் ஒரு தகவலை குட்டிக்கதையுடன் தனக்கே உரித்தான நடையில் கருத்துக்களை சாமானியனும் புரிந்துகொள்ளும் வகையில் அதிகபட்சம் எட்டு அல்லது பத்து நிமிடங்களில் காற்றில் உதிர்த்து விடுவார். அவரது அன்பான கருத்துக்களோடு அன்றைய நாள் தொடங்கும். 


தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் 
வேளாண்மை பட்டதாரிஆவார். நெல்லை வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சியின் இயக்குனராக பணிபுரிந்த அவரது பேச்சு அனைவரையும் கவர சென்னை வானொலி நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இன்று ஒரு தகவல் என்ற நிகழ்ச்சியின் மூலம் அனைத்து வீடுகளின் அதிகாலையை அழங்கரித்தார். எளிமையான பேச்சாளர், சிறந்த எழுத்தாளர் என உலகத்தமிழர்களின் நெஞ்சத்தில் நிரந்தரமாக குடிகொண்டவர். நினைவு தெரிந்த நாளிலிருந்து அவரது பேச்சை கேட்டிருக்கிறேன் தொலைக்காட்சி என்ற பூதம் வானொலியை தின்று ஏப்பம் விடும்வரை அவர் தந்த தகவல்களை உள்வாங்கியிருக்கிறேன். 

ஒவ்வொருநாள் காலையில் அவர் தந்த தகவல்கள் முழுவதையும் திரட்டி
வானதி பதிப்பகம் தொகுத்து பெரும் நூலாக வெளியிட்டுள்ளனர். புத்தக கண்காட்சியில் பெரிய ராட்சதன்போல் அமர்ந்திருந்த அந்த இரண்டு புத்தகங்களையும் தூக்கி வந்தேன். சில கலைத்துப்போன சோர்வான தருணங்களில் இன்றும் புத்தகத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி வாசிக்கும்போது அந்த காலைப்பொழுதிற்கே நம்மை அழைத்துச்செல்லும் மாயத்தை உணர்கிறேன். குட்டிகுட்டி கதைகள் மூலம் நம் சிந்தனைக்கு விருந்தான "இன்று ஒரு தகவல்"அடுத்த தலைமுறைக்கும் சென்றடைய வேண்டும் பள்ளி கல்லூரி மற்றும் நமது வீடுகளில் கட்டாயம் இருக்கவேண்டிய புத்தகம்.